இந்திய விமான நிறுவனங்களின் 377 விமானங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாம்; ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்களும் அடங்கும்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் சுமார் 50 சதவீத விமானங்கள் தொடர்ச்சியான தொழில்நுட்ப குறைபாடுகளை கொண்டுள்ளதாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 754 விமானங்களில் 377 விமானங்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளுக்காக (Repetitive defects) அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் ஏர் இந்தியா குழுமம் மற்றும் இண்டிகோ ஆகிய நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான குறைபாடுகளை கொண்டுள்ள நிறுவனங்களாக பட்டியலில் முன்னணியில் உள்ளன. இந்திய விமான போக்குவரத்து துறையில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் குறித்த முக்கிய தகவல்களை விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல் வியாழக்கிழமை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
தரவுகள்
நிறுவனங்கள் வாரியான தரவுகள்
விமான நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இண்டிகோ நிறுவனத்தின் 405 விமானங்கள் பரிசோதிக்கப்பட்டதில் 148 விமானங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. ஆனால், விகிதாச்சார அடிப்படையில் ஏர் இந்தியா குழுமம் மிக மோசமான நிலையில் உள்ளது. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் 267 விமானங்களில் 191 விமானங்கள் (சுமார் 72%) தொடர் குறைபாடுகளை கொண்டுள்ளன. குறிப்பாக, ஏர் இந்தியாவின் 166 விமானங்களில் 137 விமானங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மேலும், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 43 விமானங்களில் 16 விமானங்களும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் 32 விமானங்களில் 14 விமானங்களும் தொழில்நுட்ப குறைபாடுகளுக்காக கண்டறியப்பட்டுள்ளன.
விளக்கம்
ஏர் இந்தியா நிர்வாகத்தின் விளக்கம்
இந்த தரவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர், "மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் நாங்கள் மேற்கொண்ட விரிவான சோதனைகள் காரணமாகவே இந்த எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், கண்டறியப்பட்ட பெரும்பாலான குறைபாடுகள் இருக்கைகள், உணவுத் தட்டுகள் மற்றும் திரை வசதிகள் போன்ற பயணிகளின் வசதி சார்ந்தவை (Category D) என்றும், இவை விமானத்தின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
DGCA
கண்காணிப்பு தீவிரம்
விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, கடந்த ஆண்டில் மட்டும் 3,890 கண்காணிப்பு ஆய்வுகளையும், 874 திடீர் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளது. அதிகரித்து வரும் விமான போக்குவரத்தை கையாள, DGCA அமைப்பில் உள்ள தொழில்நுட்ப பணியிடங்களின் எண்ணிக்கை 637-லிருந்து 1,063-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.