கேரளா அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலவரம்!
கேரளாவில் நடைபெற்ற அர்ஜெண்டினா வெற்றி கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுளனர். நேற்று முன்தினம் உலக கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம் என்பதால், அவர்கள் ஒவ்வொரு முறை கால்பந்து போட்டிகள் நடக்கும் போதும் போஸ்டர் ஒட்டுவது, கேக் வெட்டுவது போன்ற காரியங்களை செய்வர். அர்ஜென்டினா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போன்ற அணிகளுக்கான ரசிகர்கள், குழுக்களாக இணைந்து கால்பந்து விளையாட்டை கொண்டாடுவார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம், அர்ஜெண்டினா அணி கால்பந்து இறுதி போட்டிகளில் வென்றது. இந்த மாபெரும் வெற்றியை அர்ஜெண்டினா அணியின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். ஆனால், இந்த கொண்டாட்டமே சிறிது நேரத்தில் வன்முறையாக மாறிவிட்டது.
கொண்டாட்டத்தால் ஏற்பட்ட கலவரம்!
கால்பந்து ரசிகர்கள் கூடி இருந்த கண்ணூர், திருவனந்தபுரம், கோட்டயம் போன்ற பல பகுதிகளில் அன்று(டிச:18) நள்ளிரவு ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 3 பேருக்கு அருவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தைத் தடுக்க சென்ற காவலர்கள் சிலரையும் அடித்திருக்கின்றனர். இதையடுத்து, இந்த சண்டைகளில் ஈடுபட்ட 8 பேரை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொச்சி கலூர் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டுகள் முடிந்து வெளியேறும் போது ரசிகர்கள் சிலர் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 2 காவலர்களை சாலையிலேயே தரதரவென இழுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் கேரளாவின் பல பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.