தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா IAS காலமானார்!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை செயலாளராகப் பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று(செப்டம்பர் 24) காலமானார். கடந்த இரு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றியவர் பீலா வெங்கடேசன். கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், பாதிப்புகள், உயிரிழப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அன்றாட நிலவரங்களை அவர் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்புகளில் விளக்கினார். அவரது தெளிவான, துல்லியமான தகவல்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவர் நன்கு அறியப்பட்டார். சுகாதாரத்துறை மட்டுமன்றி, பல்வேறு துறைகளிலும் அவர் திறம்படப் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் எரிசக்தித்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஸ், உடல் நலக் குறைவால் காலமானார்! #SunNews | #BeelaVenkatesanIAS | #IASOfficer pic.twitter.com/njSIAASJGj
— Sun News (@sunnewstamil) September 24, 2025
பணி
பீலா IAS பின்னணி
தகுதி அடிப்படையில் மருத்துவரான டாக்டர் பீலா, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (MMC) தனது MBBS பட்டத்தை முடித்தார். 1992 ஆம் ஆண்டு ஒடிசா தொகுதியைச் சேர்ந்த IPS அதிகாரியான ராஜேஷ் தாஸை மணந்தார். ராஜேஷ் தாஸ் தமிழ்நாட்டில் கூடுதல் காவல்துறை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனினும் இருவருக்குமிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் விவகாரத்தானது. நாகர்கோயிலை சேர்ந்த டாக்டர் பீலாவின் தாயார் ராணி வெங்கடேசன், மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஆவார். அவரது தந்தை எஸ்.என். வெங்கடேசன், ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குநர் ஆவார். அவர் 1997 இல் தனது சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆரம்பத்தில் பீகாரிலும் பின்னர் ஜார்க்கண்டிலும் பணியமர்த்தப்பட்டார், பின்னர் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டார்.