மலிவு விலை மருந்தகங்கள்: கூடுதலாக 10 புதிய AMRIT மருந்தகங்களை தொடங்கியது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
மலிவு விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்து, நாட்டில் சுகாதார வசதிகளை வலுப்படுத்தும் நோக்குடன் மேலும் 10 புதிய AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகங்களை மத்திய அரசு சனிக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது. AMRIT திட்டத்தின் 10வது ஆண்டு விழாவைக் குறிக்கும் விதமாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இந்த புதிய மையங்களைத் தொடங்கி வைத்தார். இப்புதிய மையங்கள் சண்டிகர், ஜம்மு, எய்ம்ஸ் தியோகர், ஸ்ரீநகர் பல் மருத்துவமனை, மும்பை துறைமுகம், ஐஐடி ஜோத்பூர் உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்களில் செயல்படத் தொடங்கும்.
AMRIT நெட்வொர்க்
AMRIT நெட்வொர்க் மருந்தகங்கள்
2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட AMRIT நெட்வொர்க், தற்போது 24 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில் 255க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களாக வளர்ந்துள்ளது என்று அமைச்சர் நட்டா தெரிவித்தார். இந்த மருந்தகங்கள் புற்றுநோயியல், இதய பராமரிப்பு மற்றும் எலும்பியல் சிகிச்சை உட்பட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைச் சந்தை விலையை விட 50% வரை குறைந்த விலையில் வழங்குகின்றன. நெட்வொர்க் மூலம் 6,500க்கும் மேற்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் கிடைப்பதாகவும், இதனால் நாடு முழுவதும் 6.85 கோடிக்கும் அதிகமான நோயாளிகள் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை ₹17,000 கோடிக்கும் அதிகமான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ₹8,500 கோடிக்கும் அதிகமான சேமிப்பு நோயாளிகளுக்குக் கிடைத்துள்ளதாகவும் நட்டா பெருமிதம் தெரிவித்தார்.