LOADING...
தென்னிந்தியாவின் கானக்குயில் பாடகி எஸ்.ஜானகி காலமானார்; தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து சோகம்
பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

தென்னிந்தியாவின் கானக்குயில் பாடகி எஸ்.ஜானகி காலமானார்; தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து சோகம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 11, 2026
09:41 pm

செய்தி முன்னோட்டம்

தென்னிந்தியாவின் கானக்குயில் என்றும் ரசிகர்களால் ஜானகி அம்மா என்றும் அன்போடு அழைக்கப்படும் புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி, மைசூரில் தனது 88வது வயதில் தற்பொழுது காலமானார். இந்திய திரையிசை உலகில் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது காந்தக் குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கட்டிப்போட்ட அவரது மறைவு, ஒட்டுமொத்தத் தென்னிந்தியத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பல்வேறு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

விருதுகள்

தேசிய விருதுகளும் பத்ம பூஷண் மறுப்பும்

இந்தியத் திரையிசைக்கு ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக 4 தேசியத் திரைப்பட விருதுகளையும், பல்வேறு மாநில அரசுகளின் 33 உயரிய விருதுகளையும் எஸ்.ஜானகி வென்றுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டில் மத்திய அரசு அவருக்கு இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூஷண் விருதை அறிவித்தது. ஆனால், தனது நீண்டகால இசை பங்களிப்பிற்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு, அந்த பத்ம பூஷண் விருதை அவர் ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்

ஜானகி அம்மாவின் குடும்பப் பின்னணி

எஸ்.ஜானகி கடந்த 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சிஸ்ட்லா ஸ்ரீராமமூர்த்தி ஒரு ஆயுர்வேத மருத்துவராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பைடிசுவாமி என்ற நாதஸ்வர வித்வானிடம் இசையின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்ட ஜானகி, முறையான பாரம்பரிய இசைப் பயிற்சி பெறாமலேயே தனது 9 வயதில் முதல் மேடை நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் 1959ல் வி.ராம்பிரசாத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

இசைப் பயணம்

ஆறு தசாப்தங்கள் நீடித்த அசாத்திய இசைப் பயணம்

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசவும் எழுதவும் கூடிய பன்மொழித் திறமை பெற்றிருந்தார். கடந்த 1957 ஆம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தனது 19வது வயதில் சினிமாவில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பாடி ஓய்வு பெற்றார். பின்னர், 2018ல் பண்ணாடி என்ற தமிழ்ப் படத்திற்காக மீண்டும் ஒரு பாடலைப் பாடி தனது 60 ஆண்டுகால இசைப் பயணத்தை நிறைவு செய்தார். தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் சமீபத்தில் மரணமடைந்த நிலையில், அடுத்தடுத்த இழப்புகள் கோலிவுட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement