LOADING...
பாக்யராஜ் இறுதிச்சடங்கில் முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்; கொதித்தெழுந்த ராதிகா
இரு தினங்களுக்கு முன் பாக்யராஜ் தனது 73-வது வயதில் காலமானார்

பாக்யராஜ் இறுதிச்சடங்கில் முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்; கொதித்தெழுந்த ராதிகா

எழுதியவர் Venkatalakshmi V
Jun 29, 2026
12:28 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற திரைக்கதை மன்னனும், மூத்த இயக்குநருமான கே. பாக்யராஜ் இரு தினங்களுக்கு முன் சென்னையில் மாரடைப்பு காரணமாக தனது 73-வது வயதில் காலமானார். நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது இறுதிச்சடங்கின் போது மீடியாக்கள் மற்றும் அங்கிருந்த சில பொதுமக்களின் அநாகரீகமான 'ஃபோட்டோகிராபி' மற்றும் 'ரீல்ஸ்' கலாச்சாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேரில் பார்த்து ஆத்திரமடைந்த நடிகை ராதிகா சரத்குமார் அங்கிருந்தவர்களை கடுமையாகச் சாடி, தனது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கொதித்துப் பதிவிட்டுள்ளார்.

சர்ச்சை

"TRP டிராமா வேணுமா? நான் தர்றேன், குடும்பத்தை விட்ருங்க!"

இயக்குநர் பாக்யராஜின் உடல் ஜூன் 27 அன்று அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட போதே, அங்கு கேமராக்களுடன் முண்டியடித்த ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கைகூப்பி அழுதபடி ராதிகா பின்வருமாறு கோரிக்கை விடுத்தார். "இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடகங்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். சினிமா என்பது எங்களின் தொழில், ஆனால் நாங்களும் மனிதர்கள் தான். டிஆர்பி (TRP) ரேட்டிங்கிற்காக உங்களுக்கு டிராமா வேண்டுமானால், அதை நான் உங்களுக்குத் தருகிறேன். தயவுசெய்து இந்தத் துயரமான நேரத்தில் அந்தக் குடும்பத்தினருக்குக் கொஞ்சம் பிரைவசியைக் கொடுங்கள்." என்று கோரினார்.

இறுதி சடங்கு

இறுதிச்சடங்கில் நடந்த அநாகரீகம்: சண்டையிட்ட ராதிகா, சுஹாசினி

ராதிகா மற்றும் பார்த்திபன் போன்ற பிரபலங்கள் கைகூப்பித் தனிமனித ஒழுக்கத்தை கோரிய போதிலும், இறுதி ஊர்வலத்தின் போது சிலர் தொடர்ந்து செல்போன்களை கொண்டு பாக்யராஜின் மனைவி பூர்ணிமா மற்றும் குடும்பத்தினரின் முகத்திற்கு நேரே ஜூம் செய்து வீடியோ எடுத்தனர். துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்த குடும்பத்தினரை அநாகரீகமாக வீடியோ எடுத்த கூட்டத்தினரை நோக்கி நடிகை ராதிகா நேரடியாக சென்று, கேமராக்களை மூடும்படி எச்சரித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இறுதி ஊர்வல வாகனத்தின் உள்ளே இருந்த பூர்ணிமா பாக்யராஜை சிலர் மொபைல் போன்களில் படம் பிடித்த போது, நடிகை சுஹாசினியும் குறுக்கே புகுந்து அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தார். இயக்குநர் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கின் போதும், இதேபோல மீடியாக்கள் எல்லையை மீறியதாக ராதிகா அப்போதும் அதிருப்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

பதிவு

"இறுதிச்சடங்கு ஒரு சர்க்கஸ் அல்ல": அரசுக்கு கோரிக்கை

இது குறித்து இன்று தனது எக்ஸ் (X) தளத்தில், பாக்யராஜின் இறுதிச்சடங்கு ஒரு 'சர்க்கஸ்' போல மாற்றப்பட்டு விட்டதாகக் குறிப்பிட்ட ராதிகா, பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் இறுதிச்சடங்குகளை ஊடகங்கள் எவ்வாறு கவர் செய்ய வேண்டும் என்பதற்கு தனியான நெறிமுறைகளை அரசு வகுக்க வேண்டும் என்றும், பப்பராசிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement