கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறையாதது ஏன்? பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட 1 லட்சம் கோடி நஷ்டம்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக சரிந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை உடனடியாகக் குறைக்கப் பொதுத்துறை எண்ணெய் சந்தை நிறுவனங்கள் முன்வர வாய்ப்பில்லை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்கு ஆசியப் போர் நெருக்கடியின் போது தங்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிதி இழப்புகளை ஈடுசெய்யவும், தற்போதைய அமைதி ஒப்பந்தத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனிக்கவும் இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால், உலகளவில் எரிபொருள் விலை குறைந்தாலும், இந்திய நுகர்வோருக்கு அதன் பலன் உடனடியாகக் கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று தெரிகிறது.
பெரும் இழப்பு
மார்ச் - மே காலகட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
கடந்த மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாத கால போர்க் சூழலில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விற்பனையில் நாளொன்றுக்கு 500 கோடி முதல் 1000 கோடி ரூபாய் வரை கடுமையான நஷ்டத்தை சந்தித்தன. இதன் ஒட்டுமொத்த இழப்பு மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாயாகும். அரசாங்கம் கடந்த மே மாதத்தில் எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 7.5 ரூபாய் வரை உயர்த்திய பின்னரே இந்த தினசரி நஷ்டம் சற்று குறைந்தது. இந்த வருவாய் இழப்பில் இருந்து நிறுவனங்களின் நிதிநிலையை மீட்டெடுக்க மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளதால், தற்போதைய விலையிலேயே எரிபொருள் விற்பனை நீடிக்கிறது.
சர்வதேச விலை ஏற்ற இறக்கம்
கச்சா எண்ணெய் இருப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தை ஏற்ற இறக்கம்
மேற்கு ஆசியப் போரின் உச்சக்கட்டத்தின் போது உலகச் சந்தையில் நாளொன்றுக்கு 10 முதல் 11 மில்லியன் பேரல் வரையிலான கச்சா எண்ணெய் சப்ளை முற்றிலும் முடங்கியது. இதில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பு நாடுகள் தங்களது அவசரக்கால மூலோபாய இருப்புகளிலிருந்து 4 மில்லியன் பேரல் எண்ணெயை சந்தையில் வெளியிட்டன. தற்பொழுது அமைதி திரும்பியுள்ளதால், நாடுகள் தங்களது பஃபர் ஸ்டாக் எனப்படும் அவசரக்கால இருப்புகளை மீண்டும் நிரப்பத் தொடங்குவார்கள். இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் இருப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், வரும் மாதங்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஒரு பேரல் 80 முதல் 90 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக எஸ்பி குளோபல் எனர்ஜி கணித்துள்ளது.
கேஸ் சிலிண்டர் விலை
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையிலும் விழுந்த பலத்த அடி
எண்ணெய் நிறுவனங்களின் இந்த நஷ்டத்திற்கு பெட்ரோல், டீசல் மட்டுமின்றி எல்பிஜி சிலிண்டர் விநியோகமும் ஒரு முக்கியக் காரணமாகும். இந்தியாவின் எல்பிஜி இறக்குமதிக்கு அடிப்படையாக விளங்கும் சவுதி அராம்கோ ஒப்பந்த விலை கடந்த பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 46 சதவீதம் வரை உயர்ந்தது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை சந்தைக்கு ஏற்ப உயர்த்தப்பட்டாலும், பொதுமக்களின் வீட்டு உபயோக சிலிண்டர் விலை முழுமையாக உயர்த்தப்படாமல் நிறுவனங்களே அந்த சுமையைத் தாங்கியதால், எல்பிஜி பிரிவில் மட்டுமே எண்ணெய் நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எவ்வளவு காலம் தேவை?
பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் இரண்டு காலாண்டுகள் தேவைப்படும்
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டு எரிசக்திப் போக்குவரத்துகள் வழக்கம் போலத் தொடங்கினாலும், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பக் குறைந்தது இரண்டு காலாண்டுகள் முதல் ஒரு வருடம் வரை காலம் எடுக்கும் என்று ஐசிஆர்ஏ நிறுவனத்தின் மதிப்பீட்டுப் பிரிவுத் தலைவர் பிரசாந்த் வசிஷ்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2022 ஏப்ரல் முதல் சில்லறை எரிபொருள் விலையில் பெரிய மாற்றங்கள் செய்யப்படாததால் ஏற்கனவே நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 90 டாலருக்கும் கீழ் தொடர்ந்து நீடித்தாலும், நிறுவனங்களின் நிதிநிலை சீரடையும் வரை சில்லறை விலைக் குறைப்புக்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.