அவசரப்பட்டு இ-வெரிஃபை செய்யாதீங்க! வருமான வரித் தாக்கலில் நோட்டீஸ் மற்றும் ரீஃபண்ட் தாமதத்தைத் தவிர்க்க இதை செக் பண்ணுங்க
செய்தி முன்னோட்டம்
வருமான வரித் தாக்கல் (ஐடிஆர்) செய்யும்போது படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிப்பதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை. படிவத்தைச் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் அதனை இ-வெரிஃபை (e-Verify) செய்வது சட்டப்படி மிகக் கட்டாயமாகும். அவ்வாறு செய்யத் தவறினால், நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆர் படிவம் செல்லாததாக அறிவிக்கப்படும். இதனால் வரி ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படுவதுடன், தேவையற்ற வருமான வரி நோட்டீஸ்களையும் நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். எனவே, இ-வெரிஃபை பட்டனை கிளிக் செய்வதற்கு முன் சில விபரங்களை சரிபார்ப்பது அவசியமாகும்.
டிடிஎஸ்
வரி கணக்கீடு மற்றும் டிடிஎஸ் விபரங்களை சரிபார்க்கவும்
நீங்கள் தாக்கல் செய்துள்ள படிவத்தில் உள்ள ஒட்டுமொத்த வரி கணக்கீடு மற்றும் ரீஃபண்ட் தொகை உங்களின் வருமானத்திற்கு பொருத்தமாக உள்ளதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனம், வங்கி அல்லது பிற அமைப்புகள் பிடித்தம் செய்த டிடிஎஸ் (TDS) வரவுகள் அனைத்தும் படிவத்தில் சரியாக பதிவாகியுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். மேலும், முன்கூட்டிய வரி அல்லது சுயமதிப்பீட்டு வரி ஏதேனும் செலுத்தியிருந்தால், அதற்கான விவரங்கள் மற்றும் வட்டி பொறுப்புகளும் சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது அவசியமாகும்.
ஒப்பீடு
படிவம் 16, 26AS மற்றும் ஏஐஎஸ் ஆவணங்களுடன் ஒப்பிடுதல்
ஐடிஆர் படிவத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பள விவரங்களை உங்களது படிவம் 16 உடனும், டிடிஎஸ் தொகையை படிவம் 26AS உடனும் முழுமையாக ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதேபோல, வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) ஆவணத்தை ஆய்வு செய்து, அதில் உள்ள வட்டி வருமானம், டிவிடெண்ட் மற்றும் முதலீட்டு ஆதாயங்கள் போன்ற அனைத்துப் பரிவர்த்தனைகளும் ஐடிஆரில் முறையாகக் காட்டப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். இதன் மூலம் ஆவண முரண்பாடுகளால் வரும் வரி நோட்டீஸ்களை எளிதாகத் தவிர்க்கலாம்.
வரி விலக்கு
வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் வரி விலக்குகள்
வருமான வரி ரீஃபண்ட் தொகைகள் தாமதமில்லாமல் நேரடியாக உங்கள் கணக்கிற்கு வர வேண்டுமானால், வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடு துல்லியமாக இருக்க வேண்டும். மேலும், அந்த வங்கி கணக்கு வருமான வரி போர்ட்டலில் முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றுடன், பிரிவு 80C, 80D மற்றும் வீட்டுக் கடன் போன்றவற்றுக்காக நீங்கள் கோரியுள்ள வரி விலக்குகள் மற்றும் இதர விலக்குகள் அனைத்தும் சரியான விதிகளின் கீழ் தான் கோரப்பட்டுள்ளதா என்பதையும் மீண்டுமொருமுறை சரிபார்க்கவும்.
விபரங்கள்
தனிநபர் விபரங்கள் மற்றும் ஆதார் இணைப்பு நிலை
மிகச் சிறிய எழுத்துப்பிழைகள் கூட பின்னாளில் பெரிய சிக்கல்களை உருவாக்கலாம். எனவே, உங்களுடைய பான் கார்டு விபரங்கள், ஆதார் இணைப்பு நிலை, பெயர், பிறந்த தேதி மற்றும் குடியிருப்பு நிலை ஆகியவை சரியாக உள்ளதா எனப் பாருங்கள். இறுதியாக, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள புதிய அல்லது பழைய வரி விதிப்பு முறை சரியானதுதானா என்பதை உறுதி செய்துவிட்டு, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலம் இ-வெரிஃபிகேஷனைப் பாதுகாப்பாக முடிக்கலாம்.