ரஷ்யாவிற்கு அதிக பெட்ரோல் விநியோகம் செய்யும் முக்கிய நாடானது இந்தியா: 10 லட்சம் பேரல் ஏற்றுமதி
செய்தி முன்னோட்டம்
உக்ரைன் நாட்டின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அந்நாட்டில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இந்தியா ரஷ்யாவிற்கு சுமார் 10 லட்சம் பேரல் பெட்ரோலை ஏற்றுமதி செய்துள்ளது. சர்வதேச கப்பல் கண்காணிப்புத் தரவுகள் மற்றும் வோர்டெக்சா ஆற்றல் பகுப்பாய்வு அமைப்பின் அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் இறக்குமதி
உள்நாட்டு உற்பத்தி குறைவும் ரஷ்யாவின் இறக்குமதி அதிகரிப்பும்
ரஷ்யாவின் கடல்வழியாக இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலின் அளவு ஆகஸ்ட் மாதத்தில் நாளொன்றுக்கு 1.25 லட்சம் பேரல்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீது 32 முறை ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக அந்நாட்டின் உள்நாட்டு எரிபொருள் உற்பத்தி சுமார் 70 சதவீதம் வரை சரிவடைந்தது.
இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க ரஷ்யா இந்தியாவிடமிருந்து எரிபொருளைப் பெற்று வருகிறது.
ரஷ்ய கச்சா எண்ணெய்
ரஷ்ய கச்சா எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் ரஷ்யாவிற்கே ஏற்றுமதி
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள வாடிநார் நயாரா எனர்ஜி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்தே இந்த பெட்ரோல் பெருமளவில் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியா கடந்த 2022 முதல் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை பெருமளவில் அதிகரித்துள்ளது.
ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் பெறப்பட்ட கச்சா எண்ணெயை சுத்திகரித்து, அதே பெட்ரோலை மீண்டும் ரஷ்யாவிற்கே இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளும் ரஷ்யாவிற்கு பெட்ரோல் வழங்கி வருகின்றன.
கட்டுப்பாடுகள்
ஏற்றுமதித் தடை மற்றும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்ய ரஷ்யா தனது பெட்ரோல் ஏற்றுமதித் தடையை 2027 ஜனவரி வரை நீட்டித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா இறக்குமதி செய்த பெட்ரோலில் 55 சதவீதம் தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் மூலமே கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதில் இந்தியாவில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் கப்பலுக்குக் கப்பல் மாறும் ரகசிய முறைகளைப் பயன்படுத்தி எரிபொருளைக் கொண்டு சேர்த்ததாக வோர்டெக்சா நிறுவனம் தெரிவித்துள்ளது.