இந்தியாவில் வளாகம் அமைக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும்-யுஜிசி தலைவர் அறிவிப்பு
உலகில் தலைசிறந்த 100 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளைகளை இந்தியாவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு கொள்கையை தற்போது யுஜிசி வெளியிட்டுள்ளது. யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் இது குறித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, வெளிநாட்டை சேர்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளைகளை துவங்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் அனுமதி பெற வேண்டும். அப்படியே அனுமதி கோரினாலும், முதலில் 10 ஆண்டுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மேலும் இந்தியாவில் முழு நேரமாக மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினால் மட்டுமே இந்தியாவில் பல்கலைக்கழக வளாகம் அமைக்க அனுமதி அளிக்கப்படும், ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கப்படும் பட்சத்தில் வளாகம் அமைக்க அனுமதி தரப்பட மாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு இம்மாத இறுதியில், இறுதி விதிமுறைகள் அறிவிக்கப்படும்
இதனையடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் இந்திய பல்கலைக்கழக கல்வித்தரத்தோடு ஒப்பிட்டு பார்க்கப்படும். மாணவர்கள் சேர்க்கையினை அவர்கள் சுதந்திரமாக மேற்கொள்ளலாம், கல்வி கட்டணத்தை அவர்களே நிர்ணயிக்கும் பட்சத்தில், அது குறித்த விவரங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். வெளிநாட்டினர் இங்கு வளாகம் அமைக்க வழங்கப்படும் நிதியுதவிகள் மத்திய அரசின் அந்நிய செலவாணி பரிமாற்ற சட்டத்திற்கு உட்பட்டதாகும். இந்த மாத இறுதியில் அனைவரது கருத்துக்களை கேட்ட பின்னர், இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் உரிமத்தை நீட்டிக்க 9ம் ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.