குழந்தைகளுக்கான பால் பவுடரில் விதிமீறல்! நெஸ்ட்லே நிறுவனத்திற்கு எதிராக எஃப்எஸ்எஸ்ஏஐ வழக்கு; பங்குச் சந்தையில் 2% சரிவு
செய்தி முன்னோட்டம்
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாகக் கூறி நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக அதிரடியாக சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. செப்டம்பர் 18 அன்று எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்தன. நெஸ்ட்லே நிறுவனத்தின் மூன்று முக்கிய தயாரிப்புகள் தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விதிமீறல்
விதிமீறலுக்கு உள்ளான நெஸ்ட்லே தயாரிப்புகளின் விவரங்கள்
நெஸ்ட்லே நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளான Nestle Lactogen Pro 1 Infant Formula, Nestle NAN Excella Pro 1 மற்றும் ஃபாலோ-அப் பார்முலா ஆகிய மூன்று குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து தயாரிப்புகளின் மீது இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இணையவழி வணிகத் தளங்களில் இவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள விளம்பர உரிமைகோரல்கள் மற்றும் அவற்றின் தரம் குறித்த சோதனைகளுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான Nestle Lactogen Pro 1 Infant Formula தயாரிப்பில் செரிமானத்திற்கு எளிதானது என்ற விளம்பர உரிமைகோரல் விதிமுறைகளை மீறியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Nestle NAN Excella Pro 1 தயாரிப்பில் 5 HMOs மற்றும் வே புரோட்டீன் குறித்த விளம்பரங்கள் சட்டப்படித் தடை செய்யப்பட்ட விளம்பர உத்தியாகக் கருதப்பட்டுள்ளது.
குறைந்த தரம்
தரம் குறைந்த பயோட்டின் அளவு மற்றும் விளம்பர விதிமீறல்கள்
ஆய்வக பரிசோதனையில், நெஸ்ட்லே தயாரித்த ஃபாலோ-அப் பார்முலாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பயோட்டின் சத்து குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
மீண்டும் செய்யப்பட்ட இரண்டாவது ஆய்வக பரிசோதனையிலும் அது தரம் குறைந்ததாகவே உறுதியானது.
மேலும், 2020-ஆம் ஆண்டின் குழந்தை ஊட்டச்சத்து உணவு விதிமுறைகள் மற்றும் 1992 ஆம் ஆண்டின் ஐஎம்எஸ் சட்டத்தின் கீழ், குழந்தைகள் உணவுகளின் விற்பனையை உயர்த்த விளம்பரங்கள் செய்வதற்கான தடைகளை மீறியதாகவும் நெஸ்ட்லே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பங்கு விலை வீழ்ச்சி
பங்குச் சந்தையில் நெஸ்ட்லே பங்குகளின் வீழ்ச்சி
எஃப்எஸ்எஸ்ஏஐ வழக்குத் தொடுத்துள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் நெஸ்ட்லே பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கினர்.
செப்டம்பர் 18 மதியம் 1:30 மணி அளவில் நெஸ்ட்லே இந்தியாவின் பங்குகள் 2.3 சதவீதம் வரை சரிந்து, ஒரு பங்கு ₹1,336 என்ற விலையில் வர்த்தகமானது.
உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாகப் பேக்கேஜ் செய்யப்பட்ட குழந்தைகள் உணவுச் சந்தையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.