சளி, இருமலுக்கு முற்றுப்புள்ளி! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'வெற்றிலை ரசம்'
செய்தி முன்னோட்டம்
மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைத்து கொள்வது அவசியமாகும். குறிப்பாக குளிர்காலங்களில் ஏற்படும் சளி, இருமல் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய 'வெற்றிலை ரசம்' ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள் சுவாச பாதையை சீர்செய்வதுடன், பசியை தூண்டவும் உதவுகின்றன. இந்த ஆரோக்கியமான ரசத்தை மிக எளிமையான முறையில் வீட்டிலேயே தயாரிப்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
செய்முறை
தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
இந்த மருத்துவ ரசம் தயாரிக்க நான்கு புதிய வெற்றிலைகள், ஒரு காய்ந்த மிளகாய், அரை தேக்கரண்டி மிளகு மற்றும் சீரகம். சுவைக்காக இரண்டு பல் பூண்டு, 500 மி.லி. புளித்தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு. தாளிப்பதற்கு எண்ணெய், கடுகு மற்றும் வெந்தயம். முதலில் புளித்தண்ணீரில் தேவையான அளவு உப்பை கரைத்து, அதனுடன் தட்டி வைக்கப்பட்ட பூண்டு, மிளகு மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் காம்புகளை நீக்கிவிட்டு, அவற்றைச் சிறு துண்டுகளாக கிள்ளி புளித்தண்ணீரில் போட வேண்டும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து நுரை கட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கிவிட வேண்டும். ரசம் அதிகமாக கொதித்தால் அதன் மருத்துவக் குணங்களும் மணமும் மாறிவிடும் என்பதால் கவனம் தேவை.